India

55 முறை கத்தி குத்து : வாலிபரை கொலை செய்து சடலத்தின் மீது நடனமாடிய 16 வயது இளைஞர் : டெல்லியில் அதிர்ச்சி!

கிழக்கு டெல்லியின் வெல்கம் காலனி பகுதியில் இளைஞர் ஒருவர் மற்றொரு வாலிபரை 55 முறை கத்தியால் குத்தி கொலை செய்து அவரது உடல் மீது நடனமாடிய சம்பவத்தை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலிஸார் ரத்த வெள்ளத்திலிருந்த வாலிபர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், இளைஞர் வாலிபரை வழிமறித்து ஏதோ கேட்கிறார். பிறகு அவர் திடீரென கத்தி ஒன்றை எடுத்துக் குத்துகிறார். இதில் கீழே விழுந்த வாலிபரின் முகம், கழுத்து, முதுகு, கண்கள் என அனைத்து இடத்திலும் கத்தியால் 55 முறை குத்துகிறார்.

பிறகு அவரது உடலைச் சாலை நடுவே இழுத்து வந்து அதன் மீது நடனமாடும் கொடூர காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலிஸார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, பிரியாணி வாங்கப் பணம் கேட்டு அவர் தரமறுத்தால் அவரை கொலை செய்ததாக அந்த இளைஞர் சொன்ன வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உயிரிழந்த வாலிபருக்கும் கொலை செய்த இளைஞருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சிசிடிவி காட்சிகளே குற்றவாளியை உடனே பிடிக்க உதவியதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2 ஆண்டாக சிறுமி பாலியல் வன்கொடுமை : சிகரெட்டால் சூடு வைத்து, மொட்டை அடித்த கொடூரன் கைது !