India

விமானத்தை தரையிறங்க விடாத தெரு நாய் : மீண்டும் கிளம்பிய இடத்துக்கே சென்ற விமானம் - நடந்தது என்ன ?

பொதுவாக வானிலை கோளாறு காரணமாக தரையிறங்கவேண்டிய விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்காமல் வேறு விமான நிலையத்துக்கு செல்லும். ஆனால், கோவாவில் வினோதமான காரணத்துக்காக அங்கு விமானம் தரையிறங்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UK881 என்ற விமானம், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. விமானநிலையத்தை விமானம் அடைந்ததும் அதற்கு தரையிறங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கும் வேளையில், விமானத்தின் ஓடுபாதையில் தெருநாய் ஒன்று அலைந்துகொண்டிருந்துள்ளது. இதனை கவனித்த விமானி பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு தரையிறங்காமல் விமானத்தை மீண்டும் பெங்களூரு விமான நிலையத்துக்கே திருப்பி அங்கு தரையிறக்கினார்.

அதன்பின்னர் இது குறித்து கோவா டபோலிம் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தெருநாய் விரட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெங்களுருவில் இருந்து விமானம் மீண்டும் கிளம்பி கோவா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கோவா விமான நிலைய அதிகாரிகள், விமான ஓடுபாதையில் எப்போதாவது தெருநாய் நுழையும். ஆனால், அவை உடனடியாக அங்கிருந்து விரட்டப்படும். இந்த முறை அதில் தவறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்று கூறியுள்ளனர்.