India

சிகிச்சை பெற வந்த ரௌடி.. அடித்தே கொன்ற மருத்துவர்.. பற்றியெரிந்த மருத்துவமனை.. பின்னணி என்ன ?

பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் ரூப்நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் அங்கிருங்கும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் அங்கே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சந்தன்குமார் என்ற பிரபல ரெளடி வந்துள்ளார்.

தனக்கு அடிபட்டிருக்கிறது என்று சிகிச்சை பெற வந்துள்ளார். ஆனால் அவருக்கு மருத்துவர் அஜித் பஸ்வான், சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றே ஆக வேண்டும் என்று ரெளடி இருக்க, முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் மருத்துவர். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் இருவருக்குள்ளும் கைகலப்பாக மாறவே, மருத்துவரும் அந்த ரெளடியை தாக்கியுள்ளார். அதோடு மருத்துவமனை ஊழியர்களும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ரெளடி சந்தன்குமார் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவர் எழுந்திருக்கவில்லை என்பதால் அவரை பரிசோதனை செய்யும்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

ரெளடி சந்தன்குமாரை அடித்தே கொலை செய்த மருத்துவமனை மீது, அவரது நண்பர்கள், கூட்டாளிகள் சரமாரி தாக்குதல் நடத்தினர். அதோடு அந்த பகுதியில் இருக்கும் குடிசைகளுக்கு தீ வைத்து கொடுமை செய்தனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்த ரெளடி சந்தன்குமாரின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர்.

மேலும், ரவுடியை அடித்துக்கொன்றுவிட்டு தலைமறைவாக இருக்கும் மருத்துவர் அஜித் மற்றும் மருத்துவமனை ஊழியரை தீவிரமாக தேடி வருகின்றனர். சிகிச்சை பெற வந்த ரெளடியை அடித்தே கொன்ற மருத்துவரின் செயல் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இவர்கள் தான் காரணம்..” - ஆசிரமத்தில் தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள்.. உ.பி-யில் அதிர்ச்சி !