India

AI DEEPFAKE VIDEO - போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை : ஒன்றிய அரசு எச்சரிக்கை!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீட்டோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதிலிருந்து இணைய உலகம் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் Artificial Inteligence-ஐ பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்தது. இப்படி AI தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சில இடங்களில் பண மோசடி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடந்து வருகிறது.

தொழில்நுட்பம் வளர்ச்சி என்பது மனிதனின் வளர்ச்சிக்குப் பயன்படும் என்று எண்ணிய சூழல் போய், தற்போது இந்த AI தொழில்நுட்பத்தால் மக்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல வேலைகளைச் செய்துவிடலாம், அதற்கு மனிதரும் அதன் மூளையும் தேவையே இல்லை என்ற நிலைமை வந்துவிடும், இதனால் வேலை திண்டாட்டம் ஏற்படும் என்று பலரும் பல வித கருத்துகளை முன்வைக்கின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற "காவலா.." பாடலுக்கு காஜல், சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் நடனமாடுவது போல் AI-ஐ பயன்படுத்தி வீடியோக்களும் வெளியானது. இதனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆச்சயர்த்துடன் கண்டு ரசித்தாலும், மற்ற சிலர் அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வந்தனர்.

அதோடு கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சில நடிகர்களிடம், அவர்கள் உடல், முகத்தைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பம் மூலம் படம் செய்வதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த சம்பவத்திற்கு அங்கிருக்கும் திரைத்துறையைச் சார்ந்த சங்கங்கள், எழுத்தாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் கூட சில நடிகர்களை இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்திகள் வெளியாவதற்கு நடிகர் அமிதாப் பச்சான் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகாவும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது நடிகை ராஷ்மிகாவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், பிகினி ஆடையில் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் பலவித கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், தற்போது அந்த வீடியோ போலி என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த வீடியோவானது பிரிட்டிஷ்-இந்தியப் பெண் ஒருவருடையது என்றும், அந்த வீடியோவில் இவரது முகத்தை வைத்துத் திரித்து வெளிப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ராஷ்மிகா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்திற்கு புதிய சட்ட அமலாக்கம் தேவை என தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,

"DeepFake பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் கவலை அளிக்கிறது. ஒருவரின் தனியுரிமையைப் பாதுகாக்க, கடுமையான சட்டங்களையும் கொள்கை மாற்றங்களையும் விரைவில் கொண்டு வர வேண்டும். புதிய தொழில்நுட்பத்திற்கு புதிய சட்ட அமலாக்கம் தேவை" என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து புகார் அளித்தால் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என சமூகவலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.

Also Read: பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் - குடும்பத்தில் நடந்த கொடூர கொலை : குஜராத்தில் அதிர்ச்சி!