India
பெண் கிடைக்க 160 கி.மீ வரை பாதயாத்திரை.. இளைஞர்களின் விநோத செயலால் கர்நாடகத்தில் சலசலப்பு !
அண்மைக்காலமாக திருமணத்துக்கு பெண் கிடைப்பது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதே இல்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதோடு 2K கிட்ஸ்களுக்கு உடனே திருமணமாவதாகவும், தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் 90'ஸ் கிட்ஸ்கள் மிகவும் வருந்தி வருகின்றனர்.
சிலர் திருமணத்துக்காக ஜாதகம், நேர்த்திக்கடன் என பலவற்றை செய்து வரும் நிலையில், இங்கு சில இளைஞர்கள் தங்களுக்கு திருமணமாக வேண்டும் என்று, சுமார் 160 கி.மீ வரை பாதயாத்திரையாக சென்று வேண்டுதல் வைத்துள்ளனர். இந்த நிகழ்வு அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமம். இங்கு வசித்து வரும் சில இளைஞர்கள் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இவர்களுக்கு பெண் தேடி சென்ற இடங்களில் எல்லாம் இவர்கள் விவசாயம் செய்து வருவதால் தங்கள் பெண்ணை கொடுக்க முடியாது என்று மறுத்து வருவதாக தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த அந்த இளைஞர்கள், தங்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டும் என்று கோடஹள்ளி கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கிராமத்தில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள மாதேஸ்வரன் மலையில் அமைந்திருக்கும் மலை மாதேஸ்வரா என்ற கோயிலுக்கு பாதயாத்திரை செலகின்றனர்.
தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும், நாட்டில் நன்றாக மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டுதல் வைத்து, பாதயாத்திரை செல்வதாக அந்த இளைஞர்கள் கூறுகின்றனர். நேற்றைய முன்தினம் மாலை நேரத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை, நாளை முடிவடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளைஞர்களின் இந்த செயலால் கர்நாடகாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
அமெரிக்காவில் இரண்டே மாதத்தில் கட்டப்பட்ட சர்வதேச மைதானம் : பிரமாண்டமாக நடைபெறும் T20 உலகக்கோப்பை !
-
இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைகிறதாம் : ச்சே.. மோடிக்கு என்ன ஒரு கவலை!
-
இந்த 3 நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டாம் : சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய தகவல் இதோ!
-
சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?
-
இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !