India

வீட்டை விட்டு காதலருடன் வெளியேறிய சிறுமி : பாதுகாப்பு தருவதாக கூறி வன்கொடுமை செய்த ரயில்வே காவலர் !

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் லீலாதர் தாக்குர் (வயது 22). ஐவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். தங்கள் காதலுக்கு பெற்றோர் ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என அவர்களுக்கு பயந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் புனேவுக்கு இருவரும் வந்திறங்கியுள்ளனர். புனே ரயில் நிலையத்துக்கு வந்ததும், என்ன செய்வது என்று தெரியாமல் ரயில் நிலையத்திலேயே இருவரும் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது இவர்களை கண்டா ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் அனில் பவார் என்பவர் பார்த்துள்ளார்.

பின்னர் அவர்களிடம் வந்து அவர் விசாரணை நடத்தியபோது இருவரும் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பதாக கூறி இருவரையும் வேறு வேறு இடங்களில் தங்க வைத்துள்ளார்.

அதன் பின்னர் அந்த சிறுமி இருந்த இடத்துக்கு தனது நண்பர் கமலேஷ் திவாரி என்பவருடன் சென்ற அந்த காவலர் அந்த சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆறு நாள்கள் அந்த சிறுமியை சித்ரவதை செய்த இருவரும் பின்னர் அந்த சிறுமியின் காதலரிடமிருந்து பணத்தை பறித்துக்கொண்டு இருவரையும் துரத்தி விட்டுள்ளனர்.

இதனிடையே காணாமல் போன இருவரையும் தேடி புனே வந்த சத்தீஸ்கர் போலிஸார் இருவரையும் கண்டுபிடித்தபோது அவர்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை போலீசாரிடம் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து போலிஸார் அந்த ரயில்வே காவலரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரின் நண்பரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தீவிரமடையும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு - தவிக்கும் ஏக்நாத் ஷிண்டே!