India

வீட்டில் மர்ம முறையில் இறந்து கிடந்த 2 சிறுமிகள் : மூத்த மகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் !

உத்தர பிரதேச மாநிலம் பகதுர்புர் பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் ஜெய்வீர். விவசாயியான இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில், அதில் மூத்த பெண்ணுக்கு 17 வயதாகிறது. மேலும் 2 மற்றும் 3-வது மகள்களுக்கு 7 மற்றும் 6 வயதாகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெய்வீர் மற்றும் அவரது மனைவி வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளனர்.

பின்னர் இரவு நேரத்தில் வீடு திரும்பிய போது, வீட்டில் 7 மற்றும் 6 வயது சிறுமிகள் இறந்து கிடந்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் கதறி அழுதனர். அப்போது மூத்த சகோதரியிடம் இதுகுறித்து கேட்டனர். அவரும் அதற்கு தனக்கு தெரியவில்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து போலீசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமிகளின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது மூத்த மகளிடம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்றும், தான் வரும்போது அவர்கள் இறந்து கிடந்ததாகவும், போலியாக மாறி மாறி கூறி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை ந்டத்தியுள்ளனர். அப்போது அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்தது.

அதாவது சம்பவத்தன்று, பெற்றோர் வீட்டில் இல்லை என்பதால் 18 வயது மூத்த மகள், தனது ஆண் நண்பரை வீட்டுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது வருகையில் இந்த சிறுமிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் ஒரு சிறுமி சண்டையிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூத்த மகள், தனது வீட்டில் உள்ள மண்வெட்டியை கொண்டு தாக்கியுள்ளார்.

இதில் சிறுமிகள் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கிருந்து அவரது காதலன் தப்பியோடிவிட்டார். எங்கே தன்னை போலீசார் கைது செய்துவிடுவாரோ என்ற பயத்தில் இதனை மறைக்க எண்ணியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மூத்த சகோதரியை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காதலரையும் போலீசார் தீவிரமாகி தடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரெடியா மக்களே.. அரசு பேருந்தில் இன்று முதல் தீபாவளிக்கு முன்பதிவு தொடக்கம்.. முழு விவரம்!