India

திருடிய பணத்தை வைத்து Insta ரீல்ஸ்.. வம்படியாக போலிஸில் சிக்கிய இளைஞர்கள்.. உ.பி-யில் அதிர்ச்சி !

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் தருண் ஷர்மா. இவர் அந்த பகுதியில் ஜோதிட நிலையம் வைத்து பிரபலமான ஜோதிடராக திகழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது வீட்டில் சேமித்து வைத்திருந்த பணம் காணாமல் போயுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது குறித்து ஜோதிடர் தருண் ஷர்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப் பதிவு செய்த போலிஸார், ஜோதிடம் பார்க்க வந்தவர்கள் யாராவது திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

அப்போது அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் இரண்டு இளைஞர்கள் மீது போலீஸாரின் சந்தேகம் திரும்பியுள்ளது. எனவே அவர்கள் குறித்து போலிஸார் விசாரித்து வந்துள்ளனர். இதனிடையே சந்தேகத்துக்கிடமான அந்த இளைஞர்கள் செய்த செயல் ஒன்று அவர்களை போலீசாரிடம் சிக்கவைத்துள்ளது.

போலிஸார் சந்தேகப்பட்ட அந்த இளைஞர்கள், ஹோட்டல் ஒன்றின் படுக்கையில், திருடப்பட்ட பணத்தைப் பரப்பி வைத்து, அதைக் காண்பித்து பெருமையாகப் பேசி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டிருந்தனர். இது போலீசாரின் கவனத்துக்கு வந்த நிலையில், அந்த ஹோட்டலுக்கு சென்ற போலிஸார் அந்த இளைஞர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜோதிடர் வீட்டில் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு மொபைல் போன்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து படப்பை குணா.. ரவுடிகளுக்கு பதவிகளை அள்ளிக்கொடுக்கும் பாஜக !