India

புகாரளிக்க வந்த தலித் பெண்.. மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்- உ.பியில் அதிர்ச்சி!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாண்டே. இவர் அங்குள்ள ஜாங்காய்சப் என்னும் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரியும் காவல்நிலையத்துக்கு கடந்த செப்டம்பர் 21-ம் தேதி பட்டியலினப் பெண் ஒருவர் புகாரளிக்க வந்துள்ளார்.

அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டேவை சந்தித்து, சில ஆண்கள் தன்னை துன்புறுத்தி, , தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக புகாரளித்துள்ளார். மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து பாண்டே இந்த புகாரில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

மேலும், உடனே தன்னுடன் காரில் வந்தால் சம்மந்தப்பட்டவர்களிடம் இது குறித்து பேசுவதாக கூறி அந்த பெண்ணை காரில் அழைத்துசென்றுள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பாண்டே அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.

அதனை குடித்த அந்த பெண் மயங்கிய நிலையில், அதை சாதகமாக பயன்படுத்தி பாண்டே அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சுயநினைவுக்கு வந்த அந்த பெண் தனக்கு நடந்த கொடுமையை அறிந்து, இது குறித்து மேலதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து உதவி போலீஸ் கமிஷனர் உத்தரவு படி சப் -இன்ஸ்பெக்டர் பாண்டே மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சப் -இன்ஸ்பெக்டர் பாண்டே தலைமறைவான நிலையில், அவரை கைது செய்யும் பணியில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒரே ஆண்டில் ஒரே இடத்தில் 26 மாணவர்கள்.. நீட் தேர்வால் சீரழியும் மாணவர்களின் வாழ்க்கை.. தொடரும் சோகம்!