India

மாதிரி தேர்வுத்தாள் தராததால் ஆத்திரம்.. நண்பரை தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற மாணவன்.. வீடியோவால் ஷாக்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சதர்காட் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த கல்லூரியில் இருக்கும் தொழிற்கல்வி பாடப்பிரிவில் சையத் ஆரிப் (21) என்ற மாணவர் படித்து வருகிறார். இந்த சூழலில் இவருடன் படிக்கும் சக மாணவரான கைஃப் என்பவர் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மாதிரி தேர்வு தாளை சையத் ஆரிப்பிடம், கைஃப் கேட்டுள்ளார். அப்போது அவரோ, தான் படிக்க வேண்டும் என்று கூறி தர மருத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கல்லூரியின் அடித்தளத்தில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கைஃப்-உடன் சில மாணவர்களும் இருந்துள்ளனர்.

அந்த தைரியத்தில் மாதிரி வினாத்தாள் வைத்திருந்த சையத் ஆரிப்பிடம், கைஃப் சண்டையிட்டுள்ளார். மேலும் ஆத்திரத்தில் அவரை கண்டபடி அடித்து தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்துபோன மாணவர் சையத் ஆரிப் சட்டென்று கீழே சரிந்தார். அப்படியும் விடாமல் அவரை தாக்கியுள்ளார் கைஃப். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டு கீழே விழுந்த சையத் ஆரிப்பை எழுப்பியுள்ளனர். அப்போது அவர் எழுந்திருக்கவில்லை.

இதனால் பயந்துபோன சக மாணவர்கள், ஆசிரியர்கள் உதவியோடு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதில் மாணவர் ஆரிப் கோமா நிலையினை அடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தார், சக மாணவர்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரிப் தாக்கப்படும் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வீட்டிலேயே பிரசவம் : வாளியில் கயிறு கட்டி வைக்கப்பட்ட பிறந்த குழந்தை.. தாயும் உயிரிழப்பு.. நடந்தது என்ன?