India

instagram-ல் அதிக பாலோயர்ஸ்.. ஈகோவில் மனைவி கொலை : போலிஸாரிடம் தந்தையை காட்டி கொடுத்த குழந்தைகள்!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சூரஜ் பால். இவரது மனைவி மம்தா பால். இந்த தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. 12 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த தம்பதிகள் இருவரும் instagramல் தங்களுக்கு என்று தனித்தனியாகக் கணக்கு வைத்துள்ளனர். இதில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் சூரஜ் பாலின் இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸை விட மனைவியின் பாலோயர்ஸ் அதிகமாக இருந்துள்ளது.

இதனால் மனைவி மீது கணவனுக்கு ஈகோ ஏற்பட்டுள்ளது. இது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தைகளுடன் தம்பதிகள் இருவரும் காரில் பூர்வாஞ்சல் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சூரஜ் பால் குழந்தைகள் கண்முன்னே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அருகே இருந்த புதரில் மறைத்துள்ளார்.

அப்போது அந்த வழியாக போலிஸாரின் ரோந்து வாகனம் வந்துள்ளது. இவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் விசாரித்துள்ளனர். அப்போது குழந்தைகள் இருவரும் நடந்த சம்பவத்தை அழுது கொண்டே கூறியுள்ளனர். இதைக்கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ஆட்டோவில் சென்ற ஆசிரியர்.. விலை உயர்ந்த iPhoneஐ பறித்து சென்ற இரண்டு வாலிபர்கள்: காட்டிக் கொடுத்த CCTV!