India

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ஊர்வலத்தில் வெடித்த வன்முறை.. 2 காவலர்கள் பலி - பின்னணியில் பஜ்ரங் தள்!

ஹரியாணா மாநிலம் குரு கிராமை ஒட்டியுள்ள பகுதி நூஹ். இங்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.அப்போது இவர்களை இளைஞர்கள் குழு ஒன்று தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என தடுத்துள்ளனர்.

இதனால் இரண்டு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது பின்னர் வன்முறையாக வெடித்துள்ளது. இரு பிரிவினரும் கற்களைக் கொண்டு வீசி தாக்கிக் கொண்டுள்ளனர். அதோடு அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் வன்முறையை அடக்க கண்ணீர் புகைக்குக் குண்டு வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் போலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு ஊர்காவல் படையைச் சேர்ந்த போலிஸார் உயிரிழந்துள்ளனர்.

பின்னர் போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அப்பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வன்முறை குருகிராமுக்கும் பரவியதால் செக்டார் 57 பகுதியில் 26 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் மற்றும் ஒரு மசூதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைக்குக் காரணமாக பஜ்ரங் தள் உறுப்பினர் மோனு மானேசர் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவர் அண்மையில் வெளியிட்ட சர்ச்சை வீடியோ இந்த வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதோடு பசுவதை செய்யப்பட்டதாக இரண்டு இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு மோனு மானேசர் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒரு சமூகத்தை மட்டுமே பழிசுமத்த முடியாது -மணிப்பூர் கலவர வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது என்ன?