India

2 வயது குழந்தை காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பம்.. தாய் செய்த கொடூரத்தை காட்டிக் கொடுத்த 'மழை' !

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் துவாடா பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரது 2 வயதுக் குழந்தை கீதா ஸ்ரீ. இந்நிலையில் கடந்த ஜூலை 17ம் தேதி குழந்தைக்குத் தாய் சினேகா உணவு ஊட்டியுள்ளார்.

அப்போது குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாய் வீட்டிலிருந்த உணவு கரண்டியை எடுத்து குழந்தையின் தலையில் அடித்துள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

பின்னர் குழந்தை இறந்ததைக் கண்டு சினேகா கதறி அழுதுள்ளார். இந்த உண்மை வெளியே தெரிந்தால் தனது பெயர் கெட்டுப்போகும் என நினைத்த சினேகா குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளார்

இதையடுத்து வீட்டிற்கு வந்த கணவன் குழந்தை குறித்துக் கேட்டுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணவில்லை என கூறியுள்ளார். பிறகு இருவரும் குழந்தையைத் தேடிவந்துள்ளனர்.

இதற்கிடையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சடலம் மேலே வந்துள்ளது. அப்போது நாய்கள் குழந்தையின் உடலை இழுத்துக் கொண்டு தெருவில் சுற்றி வந்துள்ளன.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் குழந்தை உடலை மீட்டு விசாரித்தபோது அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் சினேகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 வயதுக் குழந்தையைத் தாய்க் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’காசே இல்ல இவங்க ரொம்ப பாவம்’.. திருடவந்த வீட்டில் உரிமையாளருக்கு ரூ.500ஐ வைத்துச் சென்ற கொள்ளையர்கள்!