India

7 பெண்கள் பாலியல் வன்கொடுமை; 2 பேர் எரித்து கொலை: மணிப்பூரில் அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. 82 நாட்களாகியும் இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.

மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்நிலையில், வன்முறை தொடங்கிய அடுத்த நாளான மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் குக்கி இன பெண்களுக்கு பல கொடூரங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இம்பாலில் 2 பழங்குடியின இளம்பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கூடிய நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் ஒன்றிய அரசு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவையை ஒத்திவைத்தது. இதையடுத்து 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மணிப்பூர் சென்று ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர். குடியரசுத் தலைவரைச் சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூர் வன்முறையில் 27 பெண்கள் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் எரித்தும், 5 பேர் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டிருப்பதாக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே, சூராசந்த்பூரில் பள்ளிக்கு தீவைப்பு மற்றும் பிஷ்ணுபூரில் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் காயம் என வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

மேலும் இந்த வன்முறை சம்பவத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் முதலமைச்சரை பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”பாசிச பா.ஜ.கவின் பசிக்கு பலியாகும் அப்பாவி மணிப்பூர் மக்கள்”.. முரசொலி கடும் தாக்கு!