India

கணவரை 2-ம் மனைவியிடம் இருந்து பிரிக்க திட்டமிட்ட மனைவி.. உதவி செய்த மந்திரவாதிக்கு நேர்ந்த சோகம் !

ஆந்திர பிரதேச மாநிலம், நெல்லூரில் வசித்து வருபவர் ஜாகீர் பாஷா. மெடிக்கல் ஷாப் வைத்துள்ள இவரது கடையில் அதே பகுதியில் காவ்யா என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். காவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருக்கும் நிலையில், அவரது கணவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காவ்யா தனது மகளுடன் மட்டுமே வசித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் ஜாகீர் பாஷாவுக்கும் காவ்யாவுக்கும் இடையே இருந்த பழக்கம் காதலாக மாறி, திருமணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு காவ்யா தன்னை மதம் மாற்றிக்கொண்டு சமீரா என்ற பெயரில் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் அவரது மகளோ மதம் மாற ஒப்புக்கொள்ளாமல் இருந்ததால் காவ்யா ஜாகீரின் குடும்பத்துடன் முழுமையாக ஒன்ற முடியவில்லை.

இப்படியே நாட்கள் நகர, ஜாகீருக்கு அதே பகுதியை சேர்ந்த அஸ்மா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அதுவும் காதலாக மாறவே, திருமணத்தில் முடிந்தது. முதல் மனைவி சமீராவின் எதிர்ப்பையும் மீறி 2-ம் திருமணம் செய்து கொண்ட ஜாகீர், சமீராவை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவரையும் பிரிக்க எண்ணிய சமீரா, பல வழிகளில் முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் அது எதுவும் பழிக்காததால் இறுதியாக கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த மணிகாந்த் என்ற மந்திரவாதி அறிமுகம் கிடைத்தது. பணம் அதிகம் செலவு செய்து வசியம், சூனியம் என்ற மாதக்கணக்கில் வைத்து பார்த்துள்ளார். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே என்ன செய்வதென்று யோசித்தபோது, சமீராவின் மகள் மற்றும் அவரது தோழி யோசனை கூறியுள்ளனர்.

அதன்படி சமீரா மந்திரவாதி மணிகாந்தை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கே வந்த அவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அவரை கொலை செய்து பின்னர் சாக்கு மூட்டை ஒன்றில் கட்டி அஸ்மா வீட்டுக்கு கொண்டு சென்று போட்டுவிட்டனர். பின்னர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அவர்களது சந்தேகம் சமீரா மீது வரவே அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது பதிலும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: இளம்பெண் பெயரில் போலி ID.. வெளியான ஆபாச புகைப்படம்.. உண்மை அறிந்து அதிர்ந்த பெண் இறுதியில் செய்தது என்ன ?