India

காரில் வைத்து மனைவியை எரித்துக் கொன்ற கணவன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

மகாராஷ்டிரா மாநிலம், கர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் அமோல். இவரது மனைவி சவிதா. இந்த தம்பதிகள் கடந்த ஜூன் 23ம் தேதி புல்தானா மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலிஸார் அவரது கணவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், நாங்கள் காரில் வந்து கொண்டிருந்த போது சரக்கு வேன் ஒன்று மோதியது. பின்னர் நான் காரில் இருந்து இறங்கி வேன் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தேன். அந்நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில், காரில் இருந்து வெளியே வரமுடியாமல் எனது மனைவி மாட்டிக் கொண்டார். அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளார். ஆனால் இவரது பேச்சில் போலிஸார் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த இடத்தில் விபத்து நடந்ததற்கான எந்த தடையமும் இல்லை. இதனால் அவரது கணவர் மீது போலிஸாரின் சந்தேகம் இன்னும் கூடுதல் ஆகியிருக்கிறது. இதையடுத்து போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த தம்பதிக்குத் திருமணம் நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மனைவியை அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளார் அமோலு. ஒருகட்டத்தில் மனைவியைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி காரில் வைத்து மனைவியை எரித்து கொலை செய்து விட்டு விபத்து ஏற்பட்டதுபோல் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: திடீரென ஏற்பட்ட மின்கசிவு.. ஜன்னல் கண்ணாடியை உடைத்து பச்சிளம் குழந்தைகளை காப்பற்றிய மருத்துவ ஊழியர்கள் !