India

தோழியை திருமணம் செய்ய ஆணாக மாற முயன்ற இளம்பெண்.. மந்திரவாதியை அணுகியபோது நேர்ந்த கொடுமை! - நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியை சேர்ந்தவர் பூனம் குமாரி (27). இவர் கல்லூரியில் படிக்கும்போது பிரீத்தி சாகர் என்ற 25 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தன்பால் ஈர்ப்பாளரான இவர்கள் சில வருட காலமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் பிரீத்திக்கு அவரது குடும்பத்தார் மாப்பிள்ளை வரன் பார்த்துவந்துள்ளனர். ஆனால் பிரீத்தி அந்த வரன்களை தட்டி கழித்து வந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து அவரது குடும்பத்தார் அவருக்கு வரன் தேடி வந்துள்ளனர். இப்படியே சில மாதங்கள் செல்ல, அண்மையில் பிரீத்தி - பூனம் குமாரி காதல் விவகாரம் பிரீத்தி குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

தன்பாலின காதலை அவரது குடும்பத்தார் கடுமையாக எதிர்த்து வந்தனர். மேலும் பூனமை அழைத்து தனது மகளை விட்டு விடும்படி எச்சரித்தும் அனுப்பினர். இருந்தபோதிலும் தங்கள் காதலில் இருவரும் உறுதியாக இருந்தனர். எனவே, பிரீத்தியின் தாய் ஊர்மிளா, பூனமை அழைத்து, ஆணாக மாறினால் தனது மகளை கட்டி கொடுப்பதாகவும், ஆணாக மாற தனக்கு தெரிந்த ஒரு மந்திரவாதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய பூனமும், லக்கிம்பூர்கேரியில் வசிக்கும் ராம்நிவாஸ் என்ற போலி மந்திரவாதியை அணுகியுள்ளார். அங்கே அவரை பிடித்து கட்டி வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சடலத்தை ஒரு புதருக்குள் மறைத்து வைத்துள்ளார். இந்த சூழலில் தனது சகோதரியை கடந்த ஏப்ரல் 13-ம் தேதி காணவில்லை என்று ஏப்ரல் 18-ம் தேதி பூனமின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது செல்போன் மூலம் விவரங்களை சேகரித்தபோது இந்த போலி மந்திரவாதி சிக்கியுள்ளார். அவரிடம் விசாரிக்கையில், பூனமை தான் தான் கொன்று மறைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இதனை பிரீத்தியின் தாய் ஊர்மிளா சொன்னதாகவும், இதற்காக அவரிடம் இருந்து 1.5 லட்சம் பெற்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதைதொடர்ந்து பூனமின் சடலத்தை மீட்ட அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பியதோடு தாய் ஊர்மிளா, மற்றும் அவரது மகள் பிரீத்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு தெரிந்தும் போலீசில் தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் பிரீத்தி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தோழியை திருமணம் செய்ய அவரது தாயின் அறிவுறுத்தலின் பேரில், ஆணாக மாற முயன்ற இளம்பெண்ணை மந்திரவாதி ஒருவர் கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 110 ஆண்டுகளுக்கு பிறகும் 5 உயிர்களை காவு வாங்கிய டைட்டானிக்.. நீருக்கடியில் சென்றவர்களுக்கு நடந்தது என்ன?