India

ஒடிசா ரயில் விபத்து: உயிரோடு இருக்கும் கணவர் இறந்து போனதாக நாடகமாடிய மனைவி-கையும் களவுமாக பிடித்த போலிஸ்

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே 2-ம் தேதி இரவு நேரத்தில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின.

தொடர்ந்து அடுத்தடுத்து 3 ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது. தற்போது வரை 275 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது; மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதுமிலிருந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ரயில்வேயும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடியும், ரூ.5 லட்சம் வழங்கப்படும் என ஒடிசா அரசும் அறிவித்துள்ளது.

இந்த சூழலில் இந்த நிவாரண தொகையை பெறுவதற்காக ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மனியாபந்தா பகுதியை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்ற பெண் ஒருவர் தனது கணவர் இறந்து விட்டதாக கூறி, ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். தொடர்ந்து அந்த ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் இது போலியான தகவல் என்று கண்டறிந்தனர்.

இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தன்பேரில், கீதாஞ்சலியை பிடித்து விசாரித்தனர். அப்போது பணத்திற்காக ஆசைப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழும் கணவன் பிஜய் தத்தா இறந்துவிட்டதாக போலி சான்றிதழ், ஆவணங்கள் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இந்த விவகாரம் பிரிந்து வாழ்ந்த கணவர் பிஜய்க்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த அவர் அரசு பணத்தை மோசடியாக பெற முயன்றதற்கும், தான் இறந்து விட்டதாக போலி சான்றிதழ்களை பெற முயன்றதற்கும் தனது மனைவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பஹாநகர் போலீசார் தலைமறைவாக இருக்கும் கீதாஞ்சலியை தேடி வருகின்றனர்.

நிவாரண தொகைக்கு ஆசைப்பட்டு ஒடிசா இரயில் விபத்தில் தனது கணவர் சிக்கி உயிரிழந்து விட்டதாக நாடமாடிய மனைவியை கைது செய்ய கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’நான் வீட்டுக்கு போனோம்’.. அரசு பேருந்தை ஜாலியாக ஒட்டிச்சென்ற நபர் : அடுத்துக் காத்திருந்த அதிர்ச்சி!