India

நாளை திறக்கப்படும் புதிய நாடாளுமன்றம்.. மல்யுத்த வீரர், வீராங்கனைகளில் அறிவிப்பால் டெல்லியில் பரபரப்பு !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு அமைத்தும் 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் போராட்டத்திற்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.இதனால் இவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை புதிய நாடாளுமன்றம் திறக்கப்படவுள்ள நிலையில், அதை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் மஹா பஞ்சாயத்தும் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: இந்திய பெண்ணோடு காதல், திருமணம்.. விரைவில் இந்திய ரஞ்சி அணியில் ஆடவுள்ள இங்கிலாந்து வீரர்.. யார் அவர் ?