India

விசாரணையின் போது பெண் நீதிபதியை கத்தியால் குத்த வந்த 15 வயது சிறுவன்.. கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி!

கேரளாவில் அரசு மருத்துவமனையில் போலிஸார் சிகிச்சைக்காக அழைத்து வந்த குற்றவாளிக்குப் பெண் மருத்துவர் சிகிச்சை அளித்தார். அப்போது அந்த நபர் அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து மருத்துவரைச் சரமாரியாகக் குத்தி கொலை செய்தார்.

இந்த கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நிலையில் தற்போது மீண்டும் 15 வயது சிறுவன் ஒருவன் விசாரணையின் போது பெண் நீதிபதியைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் வீட்டில் தினமும் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் தாயாரிடம் பணம் கேட்டுள்ளார்.

அப்போது பணம் தரமுடியாது என கூறியதால் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்து சிறுவன் கலவரம் செய்துள்ளார். அவரை கட்டுப்படுத்த முடியாததால் இதுபற்றி போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் சிறுவரை பிடித்துச் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காகச் சிறுவனை நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது பெண் நீதிபதி சிறுவனிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தார்.

அந்நேரம் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவன் பெண் நீதிபதியைக் குத்த முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலிஸார் சிறுவனைத் தடுத்து வெளியே இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பள்ளி ஆசிரியர் ஓட்டி சென்ற கார்.. லோடு டெம்போவில் மோதியதில் மற்றொரு பள்ளி ஆசிரியர் பலி; 3 பேர் படுகாயம் !