India

கடத்தப்பட்ட சிறுமி.. திருமணத்திற்காக ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை: பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அதிர்ச்சி!

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி கடத்தப்பட்டு திருமணத்திற்காக ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குத்லா பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு சிறுமி தேர்வு முடித்து விட்டு சுற்றுலா செல்வதற்காக கட்னி ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது சில இளைஞர்கள் சிறுமியிடம் பேச்சு கொடுத்து அவருக்கு உணவு மற்றும் குளிர்பானங்களைக் கொடுத்துள்ளனர்.

இதைச் சாப்பிட்ட சிறுமி மயங்கியுள்ளார். பிறகு சிறுமியை அவர்கள் உஜ்ஜினி என்ற பகுதிக்குக் கடத்தி சென்றுள்ளனர். அவருக்கு நினைவு திரும்பிய பிறகு ரூ.50 ஆயிரத்திற்குச் சிறுமியை இளைஞர் ஒருவருக்கு அந்த கும்பல் விற்பனை செய்துள்ளது. பின்னர் அந்த இளைஞர் சிறுமியைத் திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமியைத் திருமணம் செய்த நபர் சில மாதங்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிறகு அந்த இளைஞரின் குடும்பத்தினர் சிறுமி வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

முன்னதாக சிறுமி காணாதது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை விசாரித்து வந்த போலிஸாருக்கு சிறுமி சதல்கேடி என்ற கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. அங்குச் சென்று அவரை போலிஸார் மீட்டனர்.

பின்னர் சிறுமியைக் கடத்தி திருமணத்திற்காக விற்பனை செய்த ஒரு பெண் உட்பட மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர். இந்த கும்பல் மேலும் வேறு யாரையாவது கடத்தி விற்பனை செய்துள்ளதாக என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: விளையாடி கொண்டிருந்த 2 குழந்தைகள்.. கிணற்றில் தவறி விழுந்தில் தத்தளித்து உயிரிழந்த நேர்ந்த சோகம் !