India

”நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்”.. துக்ளக் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதர், 2018ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அவருக்கு எதிராக துக்ளக் குருமூர்த்தி அவதூறு கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டார்.

அதில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஜூனியராக இருந்த முரளிதர் தற்போது கார்த்தி சிதம்பரத்தின் வழக்கை விசாரித்து அவர்களுக்கு சாதகமான உத்தரவுகளை வழங்கி வருகிறார் எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தன் பெயரை கலங்கப் படுத்துவே இப்படி பதிவுகள் இடப்படுகிறது என நீதிபதி முரளிதர் துக்ளக் குருமூர்த்தி கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி முரளிதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த துக்ளக் குருமூர்த்தி மீது டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கிரிமினல் மற்றும் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குருமூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் ஏற்கனவே குருமூர்த்தி மன்னிப்பு கோரியுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி தனியாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று துக்ளக் குருமூர்த்திக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!