India

இரகசியமாக இரண்டாவது திருமணம்.. கொலை மிரட்டல்: 2 பிள்ளைகளோடு புதுவை பாஜக MLA மீது முதல் மனைவி பரபர புகார்!

புதுச்சேரி காலப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை ராமாபுரத்தை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண்ணை காதலித்து, வடபழனி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். திருமணமான சில மாதங்களில் எல்லம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்து தனது தாய் வீட்டில் இருந்தார். அப்போது, கல்யாணசுந்தரம் எல்லம்மாளுக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

நாட்கள் நகர நகர சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மை எல்லம்மாளுக்கு தெரியவந்தது. இதனால் கோபமடைந்து இதுகுறித்து கல்யாணசுந்தரத்திடம் அவர் கேட்டுள்ளார். அப்போது எல்லம்மாளிடம் நேக்காக சிலவற்றை கூறி அவரை சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் இருவர் சேர்ந்து சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இந்த சூழலில் எல்லம்மாள் இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்து ஆண் குழந்தை பெற்றுள்ளார்.

இப்படி இருக்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கல்யாணசுந்தரம், தனது இரண்டாவது மனைவியின் பேச்சை கேட்டு, எல்லம்மாள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை சரிவர கவனிக்காமல், வீட்டுக்கு வருவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட எல்லம்மாள் கடந்த 2018 ஆம் ஆண்டு மகளிர் ஆணையத்தில் கல்யாணசுந்தரம் மீது புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து எல்லம்மாளை மீண்டும் சமாதானம் செய்த கல்யாணசுந்தரம், எல்லம்மாளுக்கு மாதந்தோறும் வீட்டு செலவுக்கு என்று ரூபாய் 25 ஆயிரம் பணம் தருவதாக கூறி, அவ்வப்போது வீட்டுக்கு வந்து பிள்ளைகளையும் பார்த்து விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கல்யாணசுந்தரம், குடும்ப செலவிற்கு பணம் தராமல் ஏமாற்றி வருவதாகவும், தன்னையும் பிள்ளைகளையும் சந்திப்பபத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகவும் அவரது முதல் மனைவி புகார் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து கல்யாணசுந்தரத்திடம் கேட்டபோது, அவரும் அவருடைய இரண்டாவது மனைவியும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக எல்லம்மாள் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து தங்களுக்கு நீதி வேண்டி எல்லம்மாள் இன்று கருவடிகுப்பம் பகுதியில் உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தின் வீட்டு வாசலில் தனது இரண்டு பிள்ளைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். மேலும் தன்னை ஏமாற்றிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் எல்லம்மாள் தனது பிள்ளைகளுடன் சென்று புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து, முதல் மனைவியுடன் சேர்ந்து வாழாமல் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ள கல்யாணசுந்தரம் கடந்த 2012 என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, ஆள்மாறாட்டம் செய்து தனது 10 ஆம் பொதுத்தேர்வை எழுதிய குற்றத்திற்காக, அமைச்சர் பதவியை இழந்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “Meeshoல இருந்து பேசுறோம்.. Car பரிசா விழுந்துருக்கு”: நம்பி 4 லட்சம் ஏமாந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு