India

மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை.. பா.ஜ.க முதல்வர் நடத்தி வைத்த திருமணத்தில் நடந்த கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக சிவ்ராஜ் சிங் சௌகான் உள்ளார். இந்த மாநிலத்தில் இலவச திருமண திட்டத்தில் ஏழை எளிய ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தலைமையில் 219 ஏழை ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு முன்பு மணப் பெண்களுக்குக் கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஐந்து பெண்கள் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவர்கள் திருமண பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தற்போது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கமல்நாத், "200 பெண்களுக்குக் கர்ப்ப பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைதானா? இது உண்மையா? என்பதை முதல்வரிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இது உண்மையை என்றால் யாருடைய கட்டளையின் பேரில் பெண்கள் இப்படி ஒரு மூர்க்கத்தனமான அவமானத்திற்கு ஆளானார்கள்? . முதல்வரின் பார்வையில் ஏழைப் பெண்களுக்குக் கண்ணியம் இல்லையா?. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் மத்தியப் பிரதேசம் ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது.

இந்த விவகாரத்தில் உயர்மட்ட, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கர்ப்ப பரிசோதனைகள் மட்டும் அல்ல. பெண்களுக்கு எதிரான பெண் வெறுப்பு மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: புல்வாமா தாக்குதல் : உண்மைக்காகக் குரல் எழுப்புபவர்களை பாஜக மிரட்டுகிறது -காங்கிரஸ் குற்றச்சாட்டு !