India

தனி தனியே பிரிந்த மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்.. அலறிய பயணிகள்.. நடந்தது என்ன ?

மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு இரவு 8 மணியளவில் கர்நாடகா மாநிலம் ராம்நகர் ரயில் நிலையத்தின் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென பெட்டியை இணைக்கும் இணைப்பு கம்பி உடைந்துள்ளது. இதனைக் கண்ட பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பெட்டி எண் 5 மற்றும் 6 ஆகியவை தனியாக கழன்றுள்ளது. இது தொடர்பாக ஓட்டுனருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர் உடனடியாக வண்டியை நிறுத்தியுள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

அதன்பின்னர் ரயில்வே உயிர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ரயில்வே இன்ஜினியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சிக்கலை கண்டுபிடித்து அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பெங்களூருவுக்கு செல்ல வேண்டிய பயணிகள், ஹம்பி எக்ஸ்பிரஸ் மற்றும் தலகுப்பா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தூத்துக்குடிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், தேவையான பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு அதே ரயிலில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் இந்த விபத்து காரணமாக மைசூரு -பெங்களூரு வழித்தடத்தில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய பெங்களூரு கோட்டத்தின் ரயில்வே மேலாளர் ஷியாம் சிங், "ரயிலில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ரயில் பேட்டிகள் பிரிந்துள்ளன. உடனடியாக சிக்கலை கண்டுபிடித்து ,அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: கொட்டும் மழையிலும் கொண்டு வரப்பட்ட இதயம்.. சரியான நேரத்தில் செய்த அறுவை சிகிச்சையால் உயிர் பிழைத்த சிறுமி