India

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலைசெய்ய காதலர்..டெல்லியில் அதிர்ச்சி!

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் ரோஹினா என்ற பெண்ணும் வினீத் என்ற இளைஞரும் ஒன்றாக வசித்து வந்தனர். அப்போது ரோஹினா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வினித்திடம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்துள்ளார். ஆனால் அதற்கு வினித் ஒப்புக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ரோஹினா வினித்திடம் வற்புறுத்திய நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைத்த வினித் ரோஹினாவை கழுத்தை நெரித்து கொலைசெய்துள்ளார்.

பின்னர் தனது சகோதரி பாருல் மற்றும் தனது நண்பர் ஒருவரை அழைத்து ரோஹினாவின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றி தனது வீட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் வீசிச்சென்றுள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு சடலத்தை கண்ட அந்த பகுதி மக்கள் இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி விசாரணை நடத்தியபோலிஸார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காமெராவை ஆய்வு செய்தபோது வினீத்தும், அவரின் நண்பரும் சேர்ந்து ரோஹினாவின் உடலை எடுத்துச்சென்றது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது வினித் வீட்டை காலி செய்திருந்தார். அதன்பின்னர் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தியபோது வினீத்தின் சகோதரி பாருல் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதன்படி பாருல்லை கைதுசெய்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.

மேலும் வினீத் மற்றும் அவரின் தந்தைஉத்தரப்பிரதேசத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்ததும், கடந்த நவம்பர் மாதம் தான் சிறையிலிருது வினீத் ஜாமீனில் வெளியில் வந்த தகவலும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார் வினீத் அவரின் நண்பரை தேடிவரும் போலிஸார் சடலத்தை மறைக்க உதவிய அவரின் சகோதரியை கைது செய்தனர்.