India

’நீ சோம்பேறி’.. உணவு சமைக்காத மனைவியை அடித்தே கொன்ற கணவன்: டெல்லியை உலுக்கிய சம்பவம்!

டெல்லியில் உள்ள பால்ஸ்வா பால் பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ரங்கி குப்தா. இவரது மனைவி ப்ரீத்தி. இந்த தம்பதிக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனால் ப்ரீத்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டு வேலைகள் செய்வதில் சிரமப்பட்டு வந்துள்ளார். அவரது கணவன் பஜ்ரங்கி குப்தா மனைவிக்கு உதவியாக இல்லாமல் 'சோம்பேறி', 'ஆர்வமில்லாதவள்' என திட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடித்து விட்டு பஜ்ரங்கி குப்தா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேஜையில் உணவு எதுவும் சமைக்கப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒருகட்டத்தில் அவர் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து மனைவியைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சரிந்து விழுந்துள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் ப்ரீத்தியை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ப்ரீத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ப்ரீத்தியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பஜ்ரங்கி குப்தாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு சமைக்காமலிருந்த மனைவியைக் கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒரே வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 6 பேர்.. கொசுவர்த்தியால் நேர்ந்த விபரீதம்.. டெல்லியில் பெரும் சோகம் !