India

Hack செய்யப்பட்ட தெற்கு ரயில்வேயின் Facebook பக்கம்.. கமெண்ட்களுக்கு தொடர்ந்து பதிலளிக்கும் ஹேக்கர்கள் !

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே போக்குவரத்தை கொண்டுள்ள இந்திய ரயில்வேயின் முக்கியமான ரயில்வே மண்டலமாக தெற்கு ரயில்வே மண்டலம் திகழ்ந்து வருகிறது. பிற இந்திய மண்டலங்களில் சரக்கு ரயில்கள் மூலமே அதிக வருமானம் வரும் நிலையில், தெற்கு ரயில்வே மண்டலம் மட்டுமே பயணிகள் ரயில் மூலம் அதிக வருமானம் ஈட்டுகிறது.

தெற்கு ரயில்வே சார்பில் சமூக வலைதள பக்கங்களும் தொடங்கப்பட்டு ரயில் தொடர்பான முக்கிய அறிவிப்புகள், மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளும் அதில் பதிவிடப்பட்டு வந்தன. இதன் மூலம் பொதுமக்கள் ரயில் குறித்த தகவல்களை அறிந்து வந்தனர்.

இந்த நிலையில், தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் நேற்று ஹேக் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் அதன் முகப்பு புடைபடத்தில் ஒரு கார்ட்டூன் புகைப்படத்தையும் வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அதில் கமெண்ட் செய்யும் நபர்களுக்கு தெற்கு ரயில்வேயின் பக்கத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டும் வருகிறது. வியட்நாம் மொழியில் அதில் கருத்துகள் பதிவிடப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டை சேர்ந்தவர்களே இந்த ஹேக் வேலையே செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கம் மீட்டெடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரம் தெற்கு ரயில்வேயின் வலைத்தளம் மற்றும் ட்விட்டர் கணக்குகள் வழக்கம் போல செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தமிழுக்கு பதில் இந்தியை பயன்படுத்துங்கள்: ஒன்றிய அரசின் அறிவுரையால் அதிர்ச்சி