India

சொந்த இடத்தில் தொழுகை நடத்தியவருக்கு நோட்டீஸ்.. இந்துத்துவ அமைப்பின் புகாரால் உ.பி போலிஸ் நடவடிக்கை !

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர ஹிஜாப், மாட்டிறைச்சி , இறைச்சி உணவு என யார் எந்த உணவை உண்ண வேண்டும் , எந்த உடையை உடுத்த வேண்டும் போன்ற கருத்துக்களையும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். பாஜக அரசின் இந்த சிறுபான்மையினருக்கு விரோதமான செயலை பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் அதன் உரிமையாளர் ஜாகீர் உசேன் என்பவர் தனக்கு தெரிந்த 20 முதல் 25 பேரை அழைத்து தராவீஹ் தொழுகையை நடத்தியுள்ளார். இது அந்த பகுதியில் இருந்த பஜ்ரங் தள் என்ற இந்துத்துவ அமைப்பு தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பஜ்ரங் தள் அமைப்பின் சார்பில் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த தொழுகைக்கு ஏற்பாடு செய்த ஜாகீர் உசேன் உள்ளிட்ட 10 பேருக்கு உத்தரபிரதேச காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இது குறித்து விளக்கம் அளிக்காவிட்டால் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சட்டப்பிரிவு 107/116 -ன் கீழ் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தமிழுக்கு பதில் இந்தியை பயன்படுத்துங்கள்: ஒன்றிய அரசின் அறிவுரையால் அதிர்ச்சி