India

சத்தீஸ்கர் :ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணமகன், மணமகள்.. திருமண வரவேற்பில் போது நடந்த சோகம் !

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பிரிஜ்நகரை சேர்ந்தவர் அஸ்லாம் (24). இவருக்கும் ராஜாதலாப் என்ற பகுதியை சேர்ந்த காகஷா பானு (22) என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.02.2023) திருமணம் நடைபெற்றது. இவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நேற்றைய முன்தினம் (செவ்வாய்கிழமை) ராய்பூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது மணமக்கள் இருவரும் தங்கள் அறையில் தனியே பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென பெண் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என அனைவரும் அங்கு வந்து அறையின் கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் அந்த கதவு தீர்க்கப்படாததால், உடனே ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அப்போது மணமகள் இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார்; அதோடு மணமகனும் தனது கையில் கத்தியோடு, இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து அருகிலிருக்கும் திக்ரபாரா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரது உடல்களையும் மீட்ட அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தன்று கணவன் - மனைவிக்குள் ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம், அந்த ஆத்திரத்தில் கணவன் தனது மனைவியை குத்திவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் எதனால் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண வரவேற்புக்கு தயாராகி கொண்டிருந்த மணமக்கள் திடீரென உயிரிழந்து கிடந்துள்ளது மணமக்கள் வீட்டாரை மட்டுமின்றி, அந்த பகுதி முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை.. நாளை வெளியாகும் அந்த 9 படங்கள்.. பட்டியல் இதோ !