India

“யார் சாமி இவன்..” - 90 ஆயிரம் Scooty-க்கு ரூ.1 கோடியில் 'HP-99-9999' Fancy நம்பர்: ஆடிப்போன அதிகாரிகள் !

பொதுவாக பைக் பிரியர்கள் உலக முழுக்க அதிகமானோர் இருப்பர். குறிப்பாக இந்தியாவில் இளைஞர்கள் பைக் மீது அதீத காதல் கொண்டிருப்பர். சிலர் மிகவும் விலையுயர்ந்த பைக்குகளை வாங்குவதற்காக தவமிருப்பர். பலகட்ட சிக்கல்களை கடந்து சிலர் பைக்குகளை வாங்குவர்.

இவ்வாறு அவர்கள் பைக்குகளை வாங்குவது ஒரு கனவாக இருந்தாலும் அதற்கு பிடித்த எண்களை வாங்குவது ஒரு சிலருக்கு மட்டுமே கனவாக இருக்கும். இதை Fancy நம்பர் என்று கூறுவர். இவ்வாறு இந்த நம்பரை சிலர் எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்குவர். சிலர் தங்கள் பிறந்த தேதி, தனது பெற்றோர் பிறந்த தேதி, தங்களால் மறக்க முடியாத தேதி, போன் நம்பரின் எண்கள், காதலிக்கு பிடித்த எண்கள், அல்லது வரிசையாக இருக்கும் எண்கள் என பலவற்றை வாங்குவர்.

இவ்வாறு அவர்கள் விலைகொடுத்து வாங்கும் எண்கள் அவர்களுக்கு எளிதில் ஞாபகமிருக்கும் வகையில் இருக்கிறது. இதற்கு அவர்கள் 1000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பர். இதுபோன்ற Fancy நம்பர் வாங்க வேண்டும் என்பதும் சிலரது கனவாகவே இருக்கும். சில நேரங்களில் இதுபோன்ற Fancy நம்பர் ஏலமும் விடப்படும். அப்படி ஒரு ஏலத்திடல் சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

அதாவது இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் HP-99-9999 என்ற Fancy எண்ணை ஆன்லைன் மூலம் ஏலம் விட்டது. இந்த எண் மிகவும் Fancy என்பதால் இதற்கு போட்டிகள் அதிகாமாக காணப்பட்டது. வெறும் 1000 ரூபாயில் தொடங்கிய இந்த ஏலம், பல ஆயிரத்தை கடந்து, லட்சத்தை கடந்து கோடியில் வந்தது. சுமார் 3 பேர் இந்த எண்ணுக்காக ஒரு கோடிக்கு மேல் ஏலத்தில் விலை பேசினர்.

இதில் ரூ. 1,12,15,500 (1.12 கோடி) கோடிக்கு தேஷ்ராஜ் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டிக்காக இந்த நம்பரை ஏலம் எடுத்துள்ளார். இவரது ஸ்கூட்டியில் விலை ரூ.90,000 (90 ஆயிரம்); ஆனால் வாகனத்துக்கு ஏலத்தில் எடுத்த நம்பரின் விலை ரூ.1.12 கோடி. தேஷ்ராஜின் இந்த செயல் அம்மாநிலத்தில் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

90 ஆயிரம் ஸ்கூட்டிக்கு ரூ.1.12 கோடி கொடுத்து fancy எண் ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் இதுவே நாட்டில் முதல்முறை என்று கூறப்படுகிறது. அதோடு ரூ.1 கோடிக்கு மேல் விலை பேசிய மூன்று பேரில் இரண்டாவதாக சஞ்சய் குமார் என்பவர் தனது நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.1.11 கோடி என்றும், மூன்றாவதாக தரம்வீர் என்பவர் ரூ.1,00,00,500 பேசியுள்ளார். ஆனால் இவர்களை விட அதிகமாக ரூ.1.12 கோடி விலை பேசிய தேஷ்ராஜ் என்பவரே இந்த எண்ணை வென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து இலாகாவை வைத்திருக்கும் அம்மாநில துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி கூறுகையில், "இந்த பேன்சி எண்ணை ஏலம் எடுத்தவர் தொகையில் 30% முன் பணமாக கட்ட வேண்டும். ஏலதாரர்கள் இந்த எண்களைப் பெற மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. அதற்கு விதிகளின் கீழ் எந்த விதியும் இல்லை.

நாங்கள் அவர்களின் முகவரிகளை சரிபார்த்து வருகிறோம், மேலும் இதுபோன்ற அதிக ஏலங்களை மேற்கோள் காட்டுவதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை கண்டறிய முயற்சிக்கிறோம். விரைவில் யார் இந்த ஏலத்தை எடுத்தார் என்ற விவரங்களை சேகரித்து விடுவோம்" என்றார்.

தற்போதைய விதிகளின்படி, ஏலத்திற்கு பாதுகாப்புத் தொகையை டெபாசிட் செய்யத் தேவையில்லை. பதிவுக் கட்டணமாக ₹1,000 செலுத்தி யார் வேண்டுமானாலும் ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலம் முடிந்தவுடன் அந்த நபர் அந்த எண்ணை எடுக்கவில்லை என்றாலும் கூட, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏலத்தில் யார் இந்த எண்ணை வென்றார் என்ற முழுவிபரம் இன்னும் வெளிவரவில்லை.

இந்த எங்களுடன் வேறு சில Fancy எண்களும் ஏலம் விடப்பட்டது. ஆனால் இந்த எண்ணே கோடி கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “வெளியான அந்தரங்க புகைப்படங்கள்..” - சமூக வலைதளங்களில் நடக்கும் பெண் IPS-IAS அதிகாரிகளின் சண்டை -பின்னணி?