India

இந்தியாவிலும் கைவரிசை காட்டிய எலான் மஸ்க்.. இரண்டு Twitter அலுவலகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்ட நிலையில், எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.அதைத் தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றும், முன்புபோல அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், டிவிட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலகத்தில் ஊழியர்களின் ஒரு வருட உணவுக்கு ரூ.100 கோடி செலவிடப்படுவதாகவும் இதனால் இலவச உணவு சலுகையை ரத்து செய்தேன் என்றும் பதிவிட்டுள்ளார்.அதோடு சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாக கழிவறையில் பயன்படுத்தும் டாய்லெட் பேப்பர் இனி ட்விட்டர் அலுவலகத்தில் வைக்கப்படாது எனவும் எனவே இனி ஊழியர்களே டாய்லெட் பேப்பரை அலுவலகத்துக்கு எடுத்துவரவேண்டும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு கூட எலான் மஸ்க் ட்விட்டரில் தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, இவர்தான் புதிய சிஇஓ எனவும், புதிய சிஇஓ-ஐ பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது என மஸ்க் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், இந்தியாவில் உள்ள மூன்று ட்விட்டர் அலுவலகங்களில் இரண்டு அலுவலகங்களை மூடி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் புது தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் ட்விட்டர் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அதில், புது தில்லி, மும்பை அலுவலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள இரண்டு ட்விட்டர் அலுவலகங்களின் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்து வேலையை செய்யுமாறும் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: "உலகக்கோப்பையை வெல்லும் முன் சச்சினுக்குள் இத்தனை பிரச்னைகளா ?" -முன்னாள் பயிற்சியாளர் பேட்டி !