India

குழந்தை பெற்று 3 மணி நேரத்தில் தேர்வெழுத வந்த இளம்பெண்- பெண் கல்விக்கு முன்மாதிரி என குவியும் பாராட்டு!

பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருக்மணி குமாரி (வயது 22). பட்டியல் சமூகத்தை சேர்ந்த இந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்துள்ளது. எனினும் பல்வேறு போராட்டத்துக்கு மத்தியில் தனது கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பு சென்றுவந்துள்ளார்.

இந்த சூழலில் கர்ப்பம் தரித்த அவர் தொடர்ந்து பள்ளிக்கு சென்றுவந்துள்ளார். அவருக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ருக்மணி செவ்வாய் கிழமை அன்று கணிதத் தேர்வு எழுதி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். புதன்கிழமை அதிகாலை அங்கு அவருக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து சிறிது நேரமான நிலையில் அறிவியல் பாட பொதுத்தேர்வு எழுதச்செல்ல வேண்டும் என ருக்மணி கூறியதை கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தேர்வை அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளலாம் என அறிவுரையும் வழங்கியுள்ளனர்.

ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த ருக்மணி ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்கு சென்று பொதுத்தேர்வை எழுதியுள்ளார். அவருக்கு உதவியாக மருத்துவமனை செவிலியர்களும் உடன் அனுப்பப்பட்டனர். மருத்துவமனை நிர்வாகிகளின் உதவியோடு ருக்மணி நல்ல முறையில் பொதுத்தேர்வை எழுதியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பெண்களுக்கும் சொத்துகளில் உரிமை உண்டு .. இதே நாளில் தீர்மானம் கொண்டுவந்த பெரியார்.. செய்துகாட்டிய கலைஞர்!