India

ஆந்திரா: 30 லட்சம் சொத்தை கொடுத்தால்தான் இறுதிசடங்கு செய்வேன்.. தந்தையின் சடலம் முன் தகராறு செய்த மகன் !

ஆந்திரா மாநிலம், என்.டி.ஆர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிஞ்சுபல்லி கோட்யா (வயது 80). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் முடிந்துகொடுத்துவிட்டு கிஞ்சுபல்லி தனது மகனுடன் வசித்துவந்துள்ளார். கிஞ்சுபல்லிக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஒன்று சொந்தமாக இருந்துள்ளது.

அந்த சொத்து முழுவதையும் தனது பெயருக்கு எழுதித்தருமாறு கிஞ்சுபல்லியின் மகன் கிருஷ்ணா என்பவர் தந்தையிடம் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் வெறுத்துப்போன அவர், அந்த நிலத்தை 1 கோடி ரூபாய்க்கு விற்று அதில் மகனுக்கு 70 லட்சத்தை கொடுத்துள்ளார்.

மேலும், 30 லட்சத்தை தன்னுடையே கடைசி காலத்துக்காக வைத்துக்கொண்டுள்ளார். ஆனால், அந்த 30 லட்சத்தையும் தனக்கு தருமாறு கிஞ்சுபல்லியிடம் அவரின் மகன் சண்டையிட்டுள்ளார். அதோடு கொலை மிரட்டல் விட்டதாகவும் தந்தையை மகன் பலமுறை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் கிஞ்சுபல்லி மகன் வீட்டிலிருந்து தனது மனைவியோடு வெளியேறி பக்கத்து கிராமத்தில் இருந்த மகளின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சில காலம் வசித்துவந்த நிலையில், கிஞ்சுபல்லி மகளின் வீட்டில் மரணமடைந்துள்ளார்.

இந்த தகவல் கிஞ்சுபல்லியின் மகனுக்கு அளிக்கப்பட்ட நிலையில், அவரின் உடல் தகனம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஆனால், தந்தையின் சடலத்தை அவரின் மகன் கிருஷ்ணா வீட்டுக்குள் விட மறுத்ததோடு 30 லட்சம் கொடுத்தால் மட்டுமே வீட்டுக்குள் விடுவேன் என்றும், சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்வேன் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து கிருஷ்ணாவிடம் பலமுறை பேசியும் அவர் ஒப்புக்கொள்ளாததால் கிஞ்சுபல்லியின் மகளே தந்தையின் இறுதிச்சடங்குகளை செய்துமுடித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உடல் முழுவதும் காயம்.. சூடுவைத்து சித்ரவதை: வேலைக்கு அழைத்து வந்து சிறுமியைக் கொடுமைப் படுத்திய தம்பதி!