India

இறந்த மனைவியை மாநிலம் விட்டு மாநிலம் தூக்கி வந்த கூலித் தொழிலாளி.. ஆந்திராவை உலுக்கிய சோகநிகழ்வு !

ஒடிசா மாநிலம் கொரபுட் மாவட்டம் சரோடா கிராமத்தை சேர்ந்தவர் சாமுலு. கூலித்தொழிலாளியான இவரின் மனைவி இடுகுரு (வயது 30). உடல்நிலை சரியில்லாத இவருக்கு சாமுலு தன்னால் முடிந்த மருத்துவ சிகிச்சையை அழைத்துவந்தார்.

ஆனால் ஒடிசாவில் அவர் இருந்த பகுதியில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மனைவியை அழைத்து கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனைவியை அனுமதித்துள்ளார்.

அங்கு சாமுலுவின் மனைவியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை அழைத்துசெல்லுமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி மனைவியை தன்னுடைய கிராமத்துக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்துள்ளார்.

மனைவியின் உடல்நிலை காரணமாக அவரை அழைத்துக்கொண்டு பேருந்து, ரயில் போன்றவற்றில் பயணம் செய்ய முடியாது என்பதால் கையில் இருந்த காசை வைத்துக்கொண்டு ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் இருவரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

ஆனால், செல்லும் வழியில் மனைவியின் உடல்நிலை மோசமடைந்து நடுவழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மனைவியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல காசு இல்லாமல் தவித்த சாமுலு வேறு வழியின்றி மனைவியின் சடலத்தை தோளில் போட்டுகொண்டு ஒடிசா மாநிலத்தை நோக்கி சாலையில் நடக்கத்தொடங்கியுள்ளார்.

இதனைக் கண்ட சாலையில் சென்றவர்கள் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ஆம்புலஸ் மூலம் சாமுலு மனைவியின் உடலை அவருடைய சொந்த ஊர் வரை கட்டணம் ஏதும் இன்றி அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகைப்படம் மனதை உருக்கிய நிலையில், போலிஸாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஹே, எப்புட்றா.. பெங்களுருவில் 10 நொடிகளில் உணவை டெலிவரி செய்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !