India

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. தந்தையை கொடுரமாக கொலை செய்த மகன்.. டெல்லியில் கொடூரம் !

டெல்லி ஆனந்த் பர்பத் பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ஷர்மா (45). இவர் தனது மகன் சுமித் என்பவருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக கணவர் மற்றும் குழந்தையை விட்டு அவரது மனைவி பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர்.

அதோடு குடிபோதைக்கு அடிமையான ஜிதேந்திர ஷர்மாவுக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு படுத்தப்படுக்கை ஆனார். இதையடுத்து மகன் சுமித் மற்றும் தந்தை ஜிதேந்திர ஷர்மா அகியோரு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி ஜிதேந்திர ஷர்மா படுக்கையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தந்தை இறந்தது குறித்து மகன், தாய்க்கு தெரிவிக்கவே அவரும் ஓடி வந்து பார்த்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது கணவரின் மரணம் இயற்கையாக இருக்காது எனவும், தனது மகன் மீது சந்தேகம் உள்ளதாகவும் மனைவி காவல்துறையில் தெரிவித்தார். இதையடுத்து உடற்கூறாய்வு முடிவில், ஜிதேந்திர ஷர்மா மரணம் இயற்கை ஆனது இல்லை என்றும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இதுகுறித்து மகனிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் தனக்கும் இதற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று கூறி வந்தார். தொடர்ந்து நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் தனது தந்தையை தான்தான் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்த அவர் அளித்த வாக்குமூலத்தில், "சம்பவத்தன்று எனது தந்தையும் நானும் காலையில் இருந்தே குவாட்டர் வாங்கி மது அருந்தினோம். இருவரும் மது அருந்திவிட்டு படுத்துகொண்டோம். மாலை நேரத்தில் எழுந்து பார்க்கையில் எனது தந்தை படுக்கையில் சிறுநீர் கழித்திருந்தார். இதனை கண்டதும் எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. இதனால் அவரது கழுத்தை இறுக நெரித்தேன்." என்று வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பக்கவாதம் பாதித்த தந்தை படுக்கையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த மது போதையில் இருந்த 20 வயது மகன் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் டெல்லியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தூக்கில் தொங்கிய விடுதி மாணவன்: சடலத்தை கண்ட வார்டனுக்கு நேர்ந்த சோகம்.. ஆந்திர தனியார் கல்லூரியில் பகீர்