India

"இது Make in India அல்ல ஜோக் இன் இந்தியா": மோடி அரசை கடுமையாகச் சாடிய முதல்வர் சந்திரசேகர ராவ்!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தேசிய அளவில் தனது கட்சியை வலுப்படுத்தும் வகையில் அண்மையில்தான் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி என்று இருந்த கட்சி பெயரைப் பாரத ராஷ்டீரிய சமிதி என்று மாற்றி அறிவித்தார். மேலும் கட்சி பெயர் மாற்றத்திற்கான ஒப்புதலையும் தேர்தல் ஆணையத்திடம் பெற்றுவிட்டார்.

இந்நிலையில் கட்சியின் பெயர் மாற்றத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியை மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசைக் கடுமையாக முதல்வர் சந்திரசேகர ராவ் சாடியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், "பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மேக் இன் இந்தியா திட்டம் ஜோக் இன் இந்தியா திட்டமாக மாறிவிட்டது. பா.ஜ.க அரசின் இந்த திட்டம் எதையும் சாதிக்கவில்லை.

பட்டத்திற்கான மாஞ்சா நூல், தீபாவளி பட்டாசுகள், ஹோலி பண்டிகைக்கான கலர் பொடி, விளக்குகள், விநாயகர் சிலைகள், மூவர்ணக் கொடி என ஒவ்வொரு பொருளும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருகின்றன. இப்படி சீனாவின் பொருட்கள் இந்தியச் சந்தையில் அதிகரித்து வருகிறது.

அப்படி என்றால் மேக் இன் இந்தியா திட்டம் எங்கே போனது? . ஒவ்வொரு இடத்திலும் பாரத் பஜாருக்குப் பதில் சைனா பஜார்கள் தான் உள்ளன?. மூன்று வேளாண்மை சட்டங்களைக் கண்டித்து டெல்லியில் 13 மாதங்கள் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். இதில் 750 விவசாயிகள் உயிரிழந்தனர்.

அப்போது கூட பிரதமர் மோடி விவசாயிகளுக்காகவோ, அல்லது அவர்களது குடும்பங்களுக்காகவோ கண்ணீர் சிந்தவில்லை. ஏன் அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு உதவுவதற்குப் பதில் தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு இந்த அரசு உதவி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் அனைத்து பொருட்களும் இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. இந்நிலையில்தான் இந்த திட்டத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒருநாள் கூட லீவு போடாத 12 மாணவர்கள்.. தூத்துக்குடி to சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்த ஆசிரியர்!