India

மனைவியை கொன்று உடலை ஆற்றின் அருகே புதைத்த கணவன்.. விசாரணையில் போலிஸ் ஷாக்!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்திற்குட்பட்ட ஃபசல்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் பிரஜாபதி. இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஜனவரி 30ம் தேதி தனது மனைவியைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவரது மூன்று குழந்தைகளிடம் விசாரணை நடத்தியபோது, 'தனது தாய் பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளதாக அப்பா' சொன்னதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் தினேஷ் பிரஜாபதியிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.

தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது. மேலும் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக தினேஷ் பிரஜாபதி சந்தேகித்து வந்துள்ளார். கடந்த 24ம் தேதி காய்கறி சந்தைக்குச் சென்றபோது தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது மனைவி கழுத்தை நெரித்து தினேஷ் பிரஜாபதி கொலை செய்துள்ளார். பிறகு அவரது உடலை வீட்டில் இருக்கும் மற்றொரு அறையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் குழந்தைகள் தூங்கிய பிறகு இரவில் யாருக்கும் தெரியாமல் கிராமத்தில் வெளியே இருக்கும் ஆற்றின் அருகே சடலத்தை புதைத்துள்ளார். இந்த சம்பவம் போலிஸாரின் விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இவரின் வாக்குமூலத்தை அடுத்து அங்க சென்று ஜேசிபி உதவியுடன் சடலத்தைத் தோண்டி எடுத்து போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். சந்தேகத்தால் மனைவியை கொன்று உடலை கணவன் புதைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை.. வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசையால் நேர்ந்த அவலம்.. போலீஸ் விசாரணை !