India

வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க ஏறிய நபர்.. தானியங்கி கதவுகள் மூடியதால் நேர்ந்த சோகம்.. Video வெளியீடு!

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி கடந்த 2019ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் ஒன்று ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஆந்திர பிரதேச மாநிலம் ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்றுகொண்டிருந்துள்ளது. அப்போது ஒருவர் அந்த ரயிலின் உள்ளே பார்க்க ஆசைப்பட்டு ரயிலின் உள்ளே ஏறி செல்பி எடுத்துள்ளார். அப்போது ரயிலின் தானியங்கி கதவுகள் அடைக்கப்பட்டு ரயில் கிளம்பியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதவை திறக்க முயன்றும் முடியாததால் டிக்கெட் பரிசோதகரிடம் செல்பி எடுக்க உள்ளே வந்ததாக கூறியுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் வந்தே பாரத் ரயிலில் இருக்கும் தானியங்கி கதவுகள நாமாக திறக்க இயலாது, ரயில் நிலையம் வரும்போது தாமாகவே திறந்து குறிப்பிட்ட நேரத்தில் மூடிக் கொள்ளும் என்று கூறியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி 159 கி.மீ பயணம் செய்து அடுத்த ரயில் நிலையமான விஜயவாடாவில் இறங்கியுள்ளார். டிக்கெட் இன்றி பயணம் செய்ததால் அவரிடம் அபராதம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்றும், எச்சரிக்கை விடுத்து அவர் அனுப்பப்பட்டார் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: ஒருவேளை உணவுக்காக அடித்துக்கொள்ளும் மக்கள்.. அடுத்த இலங்கையான பாகிஸ்தான்.. Video வெளியாகி அதிர்ச்சி !