India

காணாமல் போன மனைவி .. ஒரு வருடத்துக்கு பின்னர் வெளிவந்த உண்மை.. நரபலியை தொடர்ந்து கேரளாவில் அதிர்ச்சி !

கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் சஜீவன்(45). இவருக்கும் ரம்யா( வயது 35) என்பவரும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகழ்ச்சியாக சென்ற இவர்கள் திருமண வாழ்க்கையில் சமீபத்தில் மனைவியின் நடத்தையில் சஜீவனுக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.

இதன் காரணமாக இருவருக்கும் சண்டை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இருவருக்கும் இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சஜீவன் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து பின்னர் வீட்டின் முன் மனைவியின் உடலை புதைத்துள்ளார்.

மேலும், குழந்தைகளிடம், அம்மா பெங்களூருவுக்கு சென்று படிக்க சென்றுள்ளார் என்று கூறிய அவர், மனைவியின் உறவினர்களிடமும் அதே பொய்யை கூறி வந்துள்ளார். ஆனால் ரம்யா தங்களை தொடர்புகொள்ளவில்லையே என்று அவரின் உறவினர்கள் கேட்டதற்கு பியூட்டீசியன் படித்துள்ள ரம்யா வளைகுடா நாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் இது குறித்து அவரின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர் இன்னொரு நபருடன் ஓடி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், மனைவி காணாமல் போய்விட்டார் என காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காணாமல் போன பெண்கள் குறித்த விசாரணை மீண்டும் சூடு பிடித்தது. அதன்படி ரம்யா காணாமல் போனது குறித்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், மனைவியை கொலை செய்து வீட்டின் முன்னர் புதைத்ததை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ரம்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலிஸார் சஜீவனை கைது செய்தனர்.