India

பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: ரயில்வே துறை அதிர்ச்சி!

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி கடந்த 2019ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து காந்தி நகர் - மும்பை, சென்னை - மைசூர் இடையே என இதுவரை 5 வழித்தடங்களில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆனால் இந்த வந்தே பாரத் ரயில்கள் தொடர்ச்சியாகக் கால்நடைகள் மோதி விபத்துக்குள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் கடந்த 6 மாதத்தில் மட்டும் வந்தே பாரத் ரயில் 68 முறை கால்நடைகள் மோதி சேதமடைந்துள்ளதாக அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள்மீது கற்கள் வீசப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஆந்திராவிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவையை ஜனவரி 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இன்று இந்நிகழ்வின் ஒத்திகை செய்து பார்த்தது ரயில்வேதுறை. அப்போது விசாகப்பட்டினம் ககாஞ்சரப்பாலம் அருகே வந்த போது வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில்கள் மீது கற்கள் வீசப்பட்டுத் தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒரு முறையல்ல 68 முறை.. வந்தே பாரத் ரயில் குறித்து அதிர்ச்சி தகவல் சொன்ன ஒன்றிய அரசு!