India

'Wagon R' கார் வேண்டாம், 'Fortuner' கார்தான் வேண்டும் -திருமணத்தை நிறுத்திய மணமகன்.. உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசித்து வருபவர் சித்தார்த் விஹார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இவரின் பெற்றோர்கள் திருமணம் செய்துவைக்க எண்ணி அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை முடிவு செய்துள்ளனர்.

பின்னர் அந்த பெண் வீட்டாரிடம் திருமணத்துக்காக கார் ஒன்றை வரதட்சணையாக தரவேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு பெண் வீட்டாரும் ஒப்புக்கொண்டு வேகன்ஆர் காரை முன்பதிவு செய்துள்ளனர். இது குறித்த தகவல் மணமகன் சித்தார்த் விஹாருக்கு தெரியவந்துள்ளது.

ஆனால், அவர் வரதட்சணையாக மஹிந்திரா ஃபார்ச்சூனர் கார்தான் வேண்டும் என்று மணமகள் வீட்டாரரிடம் கூற அதற்க்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தார்த் விஹார் ஃபார்ச்சூனர் கார் தராவிட்டால் இந்த திருமணமே வேண்டாம் என்று கூறி இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதனால் மணமகள் வீட்டார், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மணமகன் குடும்பத்தார் மீது வரதட்சணை சட்டபிரிவில் கீழ் போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக மணமகன் வீட்டாரரிடம் விசாரணையும் நடைபெற்றுள்ளது.

இதேபோல சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேசத்தின் எட்டா என்ற இடத்தில் மணமகன் கருப்பாக இருக்கிறார் என திருமணத்தை நிறுத்திய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: செம்மர கட்டைகளை பதுக்கி வைத்ததாக புகார்.. சசிகலா உறவினர் பாஸ்கர் அதிரடி கைது !