India

'என்னையா வேலையை விட்டு தூக்கின'.. 6 மாதங்களுக்கு பின் manager-ஐ துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு!

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் BPO அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அனூப் சிங் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். இவர் சரியாக வேலைப் பார்க்காததால் இந்நிறுவனத்தில் மேலாளராக உள்ள ஷர்துல் இஸ்லாம் என்பவர் அனூப் சிங்கை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளது. இருப்பினும் அடிக்கடி அனுப் சிங் அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அனுப் சிங் அலுவலகம் வந்துள்ளார். அப்போது திடீரென மேலாளர் ஷர்துல் இஸ்லாமை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது. இதைப்பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் ஷர்துல் இஸ்லாமை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்க அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வேலையிலிருந்து நீக்கிய ஆத்திரத்திலேயே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள அனூப் சிங்கை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: தொடரும் சோகம்.. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த ஹோட்டல் உரிமையாளர் மரணம்!