India

காலையில் பள்ளிக்கு சென்ற மாணவி மீது ஆசிட் வீச்சு.. டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

டெல்லியைச் சேர்ந்த 17 வயது மாணவி காலையில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென மாணவி மீது ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர், ஆசிட் பட்டத்தில் மாணவி அலறி துடித்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மாணவியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் துவாராகா என்ற பகுதியில் நடந்துள்ளது.

மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.

பின்னர் போலிஸார் சிசிடிவி காட்சியைக் கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் சச்சின் அரோரா, ஹர்ஷித் அகர்வால், வீரேந்திர சிங் ஆகிய மூன்று இளைஞர்கள்தான் மாணவி மீது ஆசிட் வீசியது என்பது தெரியவந்தது.

அதோடு இவர்கள் flipkart நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் ஆசிட் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் சம்பவம் நடந்து 12 மணி நேரத்திலேயே குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

மேலும் சச்சினுக்கும், பள்ளி மாணவிக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது. இதனால் இருவரும் காதலித்தார்களா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் பள்ளி மாணவிக்கு 8 % தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவி மீது ஆசிட்வீசப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா -பிரான்ஸ் அணிகள் மோதல்.. தோற்றும் பாராட்டை அள்ளும் மொரோக்கோ !