India

இரவு 11 மணிக்கு மேல் சாலையில் சென்றால் அபராதம்.. தம்பதியிடம் வழிப்பறி செய்த பெங்களூரு போலிஸார் !

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் தலைநகரான பெங்களுருவில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரில் கார்த்திக் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் பிறந்தநாள் விழாவுக்கு சென்று இரவு 12:30 மணி அளவில் சாலையில் நடந்து வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களை போலிஸார் மடக்கி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, அவர்களின் அடையாள அட்டையை கேட்ட போலிஸார் பின்னர் அவர்களின் மொபைல் போனை புடுங்கிவைத்துக்கொண்டதோடு இரவு 11 மணிக்கு பிறகு சாலையில் நடந்து செல்ல அனுமதி கிடையாது என்றும் கூறியுள்ளனர்.

அவர்களிடம் அந்த தம்பதியினர் அப்படி ஒரு விதி இருப்பது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறிய நிலையில், அவர்களிடம் அபராதமாக 3 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று அந்த போலிஸார் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அந்த தம்பதி அதிர்ச்சியான நிலையில், தங்களிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறியுள்ளனர்.

எனினும் அந்த தம்பதியை தொடர்ந்து மிரட்டிய போலிஸார் பின்னர் அவர்களிடமிருந்து 1000 ரூபாயை வாங்கிக்கொண்டு அவர்களை போக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தை கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்துள்ள பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் அனூப் ஷெட்டி, சம்பந்தப்பட்ட போலீஸார் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற அனுபவம் வேறு யாருக்காவது ஏற்பட்டு இருந்தால் உடனே அது குறித்து தெரிவிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Also Read: ஆசி வாங்கவந்த பாஜக எம்.பியை எட்டி உதைத்த பசு.. மனம் தளராமல் இரண்டாம் முறையும் வந்து உதை வாங்கிய சோகம் !