India

நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய Selfie.. மணமக்களுக்கு நேர்ந்த பரிதாப சம்பவம்!

கேரள மாநிலம், பரவூர் குணாவைச் சேர்ந்தவர் வினுகிருஷ்ணன். இவருக்கு ஸ்ரீராமபுரம் அரபுரவீட்டைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சம் செய்யப்பட்டிருந்தது. இவர்கள் திருமணம் இன்று பெரியவர்கள் முன்னிலையில் நடக்க இருந்தது.

இந்நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இவர்கள் நேற்று பல்வேறு கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனர். பிறகு வேலமனூர் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர்.

அங்கு கல்குவாரியின் மேலே இருந்து இருவரும் தங்களது செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது தவறுதலாக சாண்ட்ரா குவாரியில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வினுகிருஷ்ணன் உடனே குவாரியில் குதித்து சாண்ட்ராவை மீட்டு அங்கிருந்த ஒரு பாறை மீது அமரவைத்துள்ளார்.

இதைப்பார்த்த அந்த வழியாக வந்த இளைஞர் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து இருவரையும் பத்திரமாக மீட்டனர். கல்குவாரியில் விழுந்ததால் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றுபோனது. மேலும் வேறு தேதியில் திருமணத்தை நடத்துவது என இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.

Also Read: 'எப்போதும் வலிமையாக இருப்பேன்': உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த 'பேச்சுலர்' பட நடிகை!