India

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய மாணவிக்கு நேர்ந்த சோகம்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி !

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியை அடுத்துள்ளது அன்னவரை என்ற பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர் துவ்வாடாவில் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் MCA முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கமாக குண்டூர் - ராயகடா விரைவு ரயிலில் தினமும் கல்லூரிக்கு செல்வார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக இதே இரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது துவ்வாடா இரயில் நிலையத்திற்கு இரயில் வந்து நின்றுள்ளது. அந்த சமயத்தில் அவசரமாக இறங்கிய சசி, கால் இடறி ரயிலுக்கும் - நடைமேடைக்கும் இடையில் மாட்டிக்கொண்டார்.

இந்த விபத்தில் அவரது கால் தண்டவாளத்தில் சிக்கியது. இதில் பலத்த காயம் அடைந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வந்தார். இரயிலின் இடையில் சிக்கிய அவரை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை வெளியே எடுக்க முயன்றனர். இருப்பினும் முடியாத காரணத்தினால், உடனே இது குறித்து இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் மாணவியின் உடல் மாட்டிகொண்ட நிலையில், அவரை வெளியே எடுக்க முடியவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, நடைமேடை சுவரை உடைத்து மாணவியை பத்திரமாக மீட்டனர். பின்னர் ஆம்புலன்சை வரவைத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்ற நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ இணையத்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு ஒத்துழைக்க தயார்.. ஆனால் விவாதம் நடத்த பிரதமர் தயாரா? முரசொலி கேள்வி !