India

இது தாயின் முடிவு.. 33 வார கருவை கலைக்க அனுமதி கொடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்: காரணம் என்ன?

டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமணத்திற்குப் பிறகு கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து அவர் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் பெருமூளை பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். மேலும் இக்குழந்தை பிறந்தாலும் மாற்றுத்திறனாளியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த அப்பெண் கருவைக் கலைக்கமுடிவு செய்துள்ளார்.

பின்னர் கருவை கலைக்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் 24 வாரங்களைக் கடந்து விட்டால் கருவைக் கலைக்க முடியாது. இது சட்டப்படி குற்றமாகும். தற்போது கருவில் உள்ள குழந்தை 33 வாரங்களைக் கடத்து விட்டது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தால் மட்டுமே கருவை கலைக்கமுடியும் என கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்தப் பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதிபா எம்.சிங், 33 வாரக் கருவைக் கலைத்துக் கொள்ள அந்த பெண்ணுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கூறிய நீதிபதி, "கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்கவோ அல்லது கருவைக் கலைக்கவோ இருக்கும் உரிமை உலகம் முழுவதும் விவாதப் பொருளாக உள்ளது. இந்த உரிமை, தான் பெற்ற குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறாளா என்ற இறுதித் தேர்வைப் பெண்ணுக்கு வழங்குகிறது. ஒரு பெண்ணின் இந்த தேர்வை அதன் சட்டத்தில் அங்கீகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

கருவை கலைத்துக் கொள்ள விரும்புகிற பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பிறக்கப்போகும் குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பை அங்கீகரிக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: திணறும் இந்திய பொருளாதாரம் : 5வது முறையாக ரெப்போ வட்டியை உயர்த்தியது RBI.. தனி நபர் கடன் உயர வாய்ப்பு!