India

இளம் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. தந்தையே சுட்டு கொலை செய்த கொடூரம்: உ.பி-யில் அதிர்ச்சி!

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே கடந்த வாரம் சூட்கேஸில் இருந்து ஒரு இளம் பெண்ணின் சடலத்தை போலிஸார் மீட்டனர். பிறகு இது குறித்து வழக்குப் பதிவு செய்து அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அந்த பெண்ணை அடையாளம் காண டெல்லியில் அவரது போஸ்டர்களை போலிஸார் ஒட்டியுள்ளனர். அதேபோல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் போலிஸாருக்கு ஒரு தொலைப்பேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் இறந்த பெண் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் இறந்த பெண் யார் என்பதை உறுதி செய்தனர்.

இந்த விசாரணையில் இறந்த பெண் ஆயுஷி சவுத்ரி என்பது இவர் டெல்லியில் இளங்கலை கணினி படிப்பு படித்து வந்துள்ளார். அதேபோல் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து வந்ததும் தெரிந்தது.

மேலும் இது பற்றி அறிந்த அவரது பெற்றோர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் பிடிவாதத்துடன் இருந்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை நித்தேஷ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். மகளின் உடலை சூட்கேஸில் அடைத்து கணவனிடம் மனைவி கொடுத்துள்ளார். பிறகு உடல் அடைக்கப்பட்ட சூட்கேஸை மதுராவில் உள்ள சாலையில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் கணவன் மற்றும் மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததால் பெற்ற மகளையே தந்தை சுட்டுக் கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் : தப்பிக்க ஷாரீக் போட்ட Plan.. காவல்துறை தகவலால் அதிர்ச்சி !