India

மகாராஷ்டிரா : டியூசனுக்கு படிக்க வந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. ஆசிரியர் நடவடிக்கையால் அதிர்ச்சி !

டியூஷனுக்கு படிக்க வந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஆசிரியரின் செயல் மஹாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் பகுதியை அடுத்துள்ளது பல்லார்பூர். இங்கு செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தனது பள்ளி வேலை முடிந்ததும், வீட்டிற்கு அருகே இருக்கும் சிறு சிறு குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் சொல்லிக்கொடுத்து வந்ததாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவியர் பலரும் டியூசன் செல்வது வழக்கம். அப்படி தான் அதே பகுதியை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவரும் டியூசன் சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆசிரியர் தவறான முறையில் அணுகியுள்ளார்.

சம்பவத்தன்று சிறுமி ஆசிரியரிடம் டியூசன் சென்றுள்ளார். அப்போது சக மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியர் இந்த சிறுமியை மட்டும் இருக்க வைத்துள்ளார். பின்னர் அவரிடம் தவறான முறையில் நடந்துகொள்ள தனது பெட் ரூமிற்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமிக்கு சந்தேகம் வரவே உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

சிறுமிக்கு சந்தேகம் உள்ளது என்பதை அறிந்த ஆசிரியரும் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். மிரட்டலுக்கு பயந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த ஆசிரியர் மீண்டும் சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

இதனால் பெரிதும் பயந்துபோன சிறுமி அழுதுகொண்டே தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டதும் பதறிப்போன பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "வரலாற்று பொருள் புதைந்து கிடக்கிறது.. இதை திறக்க வேண்டாம்" -3 லட்சம் செலவு செய்து புதைக்கப்பட்ட Cheetos!